ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

யார் பெரியவர் ? வான் குருவியின் கூடு ! ஔவையார் பாடல்.

 ஔவையார் பாடல் - வான் குருவியின் கூடு ! 

சந்தி பிரித்து எழுதிய பாடல்

"வான் குருவியின் கூடு வல் அரக்கு தொல் கரையான்

தேன் சிலம்பி யாவர்க்கும் செய் அரிதால்  - யாம் பெரிதும்

வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண் !

எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது !"


பொருளுரை:

வான் குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு, அரக்கு எனப் படும் வலிமையான இயற்கைப் பசை,   தேன்அடை,  சிந்தனைச் சிக்கலை நம்முள் உருவாக்கிவிடும் சிலந்தி வலை இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் புல்லிய  புலனங்களே  !  ஆனால்  இந்த  அறிவியல் உலகில் எந்த மேதையாலும் இவற்றை உருவாக்க இயலுமா? 

AVVAIYAR


ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது; சாதாரண பறவையான வான் குருவி கட்டுகின்ற (தூக்கணாங் குருவிக்) கூட்டை இந்தக் கணினி யுகத்தில் வேறு எவராலும் கட்டித் தொங்கவிட்டு அதில் அக் குருவிகளைக் குடி வைக்க முடியுமா? முடியவே முடியாது !


அதாவது இந்த உலகத்தில் ஆற்றிவு படைத்த மனிதர்களாலும் செய்ய முடியாத செயல்களும்  இருக்கவே  செய்கின்றன  என்பதை இடித்துக் காட்டி,  வாழ்வில் பிற மனிதர்களிடத்தும், பிற  உயிர்களிடத்தும் நாம் சமத்துவ   உணர்வு கொண்டிருக்க  வேண்டும்  என்பதை  எடுத்துக் காட்டுவதே இப்பாடலின் நோக்கம் !


‘யாம் பெரிய வல்லாளன்’ என்பதாய் எண்ணம் கொண்டு பிறரைத் தாழ்மையாக நினைத்து விடக் கூடாது’ என்ற எச்சரிக்கையை இப்பாடல் மூலம் நமக்கு அளிக்கிறார் ஔவையார் !

"அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு மனிதனும் பெரியவர்" 

பூமியில் படைக்கப்பட்ட எல்லோருக்கும் தனித்திறமை உண்டு என்று உத்வேகத்தோடு செயல்படு என்கிறார் நமது பாட்டி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...